Wednesday 28 March 2018

ஓட்டுக்காக சிந்தித்தால் மே 12, நாட்டுக்காக சிந்தித்தால் ஜூன் 12!!


சட்ட பஞ்சாயத்து இயக்கம்

பத்திரிகை செய்தி (29-03-2018)
தொடர்புக்கு : 87545 80270 / 88704 72179

ஓட்டுக்காக சிந்தித்தால் மே 12, நாட்டுக்காக சிந்தித்தால் ஜூன் 12!!
எதை செய்யப்போகிறது மத்திய அரசு? சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேள்வி!


காவிரியை கர்நாடகா சொந்தம் கொண்டாட முடியாத வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை பக்ரா பியாஸ் மாதிரியில் அமைக்கவேண்டும் - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிட்டால் பிரிவினைவாத சக்திகள் பலம் பெறுவார்கள் - போலி தேசியத்தை பேசும் பாஜக- சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்டனம்

Satta Panchayat Iyakkam strongly urges the central government of India to constitute the Cauvery Management board on the lines of Bhakra-Beas management board’s model which would clip Karnataka’s illegal claims on River Kaveri and its assets. Central governments inaction on Cauvery management board in spite of Supreme court’s verdict will lead to secession of the Indian nation as Tamilnadu has exhausted all its peaceful and legal ways to ensure that it gets its natural justice. We strongly warn the BJP led central government to constitute CMB within today (Stipulated time by SC).


தமிழ்நாட்டின் உயிர்நாடியாக இருக்கும் காவிரியில் இருந்து தமிழகத்தின் உரிமைகளை சீராக பெறுவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என்று 1990இல் அமைக்கப்பட்டு 2007இல் தீர்ப்பை அளித்த காவிரி நடுவர் மன்றமும், 2013 மற்றும் 2018இல் உச்சநீதிமன்றமும் தொடர்ந்து மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வருகிறது. பிப்ரவரி 2018இல் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பில் 6 வாரத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும் மத்திய அரசு வாரியத்தை அமைக்காமல் தமிழக்தை மாற்றாந்தாய் மனதோடு அணுகி வருகிறது.

தேவையில்லாத சந்தேகங்கள்:

எந்த மாநிலமும் ஆற்றை சொந்தம் கொண்டாடாமல் இருப்பதற்காகவும், நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை தங்கு தடையின்றி அமல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பில் உத்தரவிட்டு இருக்கிறது.

2007 இறுதி தீர்ப்பில் (பக்கம் 223இல்), மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்க இருக்கும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மூன்று முழுநேர உறுப்பினர்கள் இருக்கவேண்டும் என்று மத்திய அரசு அமைத்த தீர்ப்பாயம் கூறியிருக்கிறது. வாரியத்தின் தலைமயிடம் எங்கு இருக்கவேண்டும் என்பதில் தொடங்கி எவ்வாறு பிரச்சனைகளை கையாள வேண்டும் என்று மிக விரிவாக எடுத்துரைத்து இருக்கிறது. பக்கம் 228இல் காவிரி ஒழுங்காற்று வாரியத்தின் பற்றியும் விரிவாக விவரித்து இருக்கிறது. இதை கண்டுகொள்ளாமல், தேவையில்லாத சந்தேகங்களை எழுப்பி காலத்தை கடத்த முயற்சிக்கும் மத்திய அரசை இயக்கம் கடுமையாக கண்டிக்கிறது.

மேலாண்மை வாரியங்களில், பக்ரா-பியாஸ், நர்மதா மற்றும் கிருஷ்ணா என்று மூன்று மாதிரிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பக்ரா பியாஸ் வாரிய மாதிரியில் ஆறு, அணைகள் மற்றும் அதன் சொத்துகள் வாரியத்திற்கு சொந்தமாகிவிடும். ஆனால் நர்மதா மாதிரியில், ஆறு மற்றும் ஆற்றின் சொத்துகள் மாநிலத்தின் சொத்துக்களாக இருக்கும், வாரியம் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அமைப்பாக மற்றும் செயல்படும். காவிரியை ஏற்கனவே கர்நாடக அரசு சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் காவிரி மேலாண்மை  வாரியத்தை பக்ரா-பியாஸ் மாதிரியில் அமைப்பதே தமிழகத்திற்கு நல்லது. 2007இல் வழங்கப்பட்ட நடுவர் மன்ற தீர்ப்பில், பக்கம் 223இல் பக்ரா-பியாஸ் மாதிரியில் அமைக்க நடுவர் மன்றமும் வலியுறுத்தி இருக்கிறது. 16 பிப்ரவரி 2018இல் உச்சநீதிமன்ற தீர்ப்பில் (CIVIL APPEAL NO. 2453 OF 2007,) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு (Page 336, Clause 290) இதை கோடிட்டு காட்டி இருக்கிறது. இந்த நுணுக்கங்களை தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியதாக தெரியவில்லை.



Kaveri Tribunal award 2007



SC Verdict – 2018


நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தெளிவான தீர்ப்புகளை புறந்தள்ளி, கர்நாடகாவில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் (May 12) வெற்றி பெறுவதற்காக, கர்நாடகாவின் கோரிக்கையின்படி மேலாண்மை வாரியத்தின் கட்டமைப்பை மாற்ற மத்திய அரசு திட்டமிடுகிறது. மேலாண்மை வாரியத்தை பக்ரா-பியாஸ் மாதிரி அல்லது அதைவிட சிறப்பான திட்டத்தில் அமைக்கவிட்டால் மேலாண்மை வாரியம் அமைத்தும் தமிழகத்திற்கு உபயோகம் இல்லாமல் போகும்.



இந்திய இறையாண்மை கேள்விக்குறி:

2007இல் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்தாமல், தனது பங்கிற்கு 6 வருடம் இழுத்தடித்த மத்திய காங்கிரஸ் அரசு, 2013இல் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு உத்தரவிட்ட பிறகும், மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் அரசிதழில் வெளியிடுவதோடு நிறுத்தி கொண்டது. 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2016இல் உச்சநீதிமன்றம் மீண்டும் மேலாண்மை வாரியம் அமைக்கச்சொன்னபோது, பாஜக அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, இவ்விஷயத்தில் மத்திய அரசிற்கு உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் வாதாடினார். 2018இல் இறுதி தீர்ப்பு அளித்த பிறகும், கடைசி நாள் வரை தீர்ப்பை அமல்படுத்தாமல் காலந்தாழ்த்தும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

சுதந்திர இந்தியாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சனை தீர்க்கப்படாமல் ஒரு மாநிலம் வஞ்சிக்கப்பட்டுவருவது ஜனநாயகத்தின் தோல்வி. மத்தியில் ஆளக்கூடிய இரண்டு கட்சிகளும் கர்நாடகாவில் வாக்குவங்கியை தக்கவைத்து கொள்வதை மட்டுமே சிந்திக்கிறன்றனர். இந்திரா காந்தி முதல் மோடி வரை வந்த பிரதமர்களில் ஒருவர் கூட தங்கள் வாக்குவங்கியை பற்றி கவலைப்படாமல், நியாயத்தின் பக்கம் நிற்காதது வருத்தத்திற்குரிய விஷயம். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் செயல்படும் கர்நாடக மற்றும் மத்திய அரசுகள் மேல் நடவடிக்கை எடுக்கும் துணிவு நீதிமன்றத்துக்கும் இல்லை. அமைதிவழியில் இருக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் முயற்சிசெய்தபிறகும், தமிழகத்திற்கான நீதி கிடைக்கவில்லையெனில், பிரிவினைக்கே வழிவகுக்கும். இந்த அநீதி, பிரிவினைவாத சக்திகளுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்து இந்திய இறையாண்மைக்கும் ஜனாயகத்திற்கும் கேடாக விளையும்.

தமிழக அரசும் எம்.பிக்களும் உச்சபச்ச அழுத்தத்தை மத்திய அரசிற்கு கொடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, தாங்கள் ஆளும் மத்திய பாஜக அரசிற்கு அடிமைகள் இல்லை என்பதை நிரூபிக்கவேண்டும். மூச்சுக்கு முன்னூறு முறை இந்திய தேசிய ஒற்றுமை பற்றி வாய்கிழிய பேசும் பாஜக, அற்ப அரசியல் காரணங்களுக்காக தமிழகத்திற்கு மாபெரும் அநீதியை இழைக்கிறது. கர்நாடகாவில் மே 12 நடக்க இருக்கும் தேர்தலை பற்றி சிந்திக்காமல், மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 அன்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு வழிவகுக்க வேண்டும். தமிழகத்தின் நியாயமான உரிமையை 50 ஆண்டு காலமாக தட்டிப்பறிப்பது அநியாய அக்கிரமத்தின் உச்சக்கட்டம். காவிரி மேலாண்மை வாரியம் அமையாவிடில், சுதந்திர இந்தியாவில் செய்யப்பட்ட மிகப்பெரிய  வரலாற்று பிழையாக அமையும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. 

                                                                                                                              சிவ.இளங்கோ 
                                                                                               தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
                                                                                                                    Contact Number: 87545-80270