Thursday 31 August 2017

பத்திரிகை செய்தி (30/08/2017) அரசின் ஓட்டுனர் உரிமம் உத்தரவு

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

பத்திரிகை செய்தி (30/08/2017)

அரசின் ஓட்டுனர் உரிமம் உத்தரவு

மக்களுக்கு கற்காலம்!

காவல்துறை - RTO க்கு பொற்காலம்!!

தமிழகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் .தங்களது அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டுமென்ற தமிழக அரசின் உத்தரவால் பொதுமக்கள் – தொழில் முறை வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள். மாற்று வழி முறைகளுக்கு ஏற்பாடுகளை செய்துவிட்டு நடைமுறைபடுத்த சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை.

தமிழக அரசு வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களது ஓட்டுநர் உரிமத்தின் அசலினை வருகின்ற செப்டம்பர் 1, 2017 முதல் வாகனம் ஓட்டும் பொழுது கையில் வைத்திருக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் கடந்த ஆகஸ்ட் 22, 2017 ம் தேதி செய்தி வெளியிட்டார். அதனை தொடர்ந்து சென்னை பெருமாநகர காவல்துறை, அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை என்றால் ரூ.500 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறைத்தண்டனை என கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி செய்தி வெளியிட்டனர்.

அடிப்படை ஆராய்ச்சி கூட அல்லாத செயல் :

அசல் உரிமத்தை வாகனம் ஓட்டும் பொழுது கையில் வைத்திருக்க வேண்டுமென கொடுத்த உத்தரவின் பின்புலம் இன்னும் குழப்பமாகவே உள்ளது. மோட்டார் வாகனசட்டம் 1988-ன் படி அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டியது அவசியமல்ல. தற்போது வந்துள்ள புதிய உத்தரவு இதற்கு எதிர்மறையாக உள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் இது தொடர்பாக கூறும் பொழுது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டவர்களும் நகலை வைத்து வண்டி ஓட்டுகின்றனர். ஆதலால் காவல் துறையினரால் இவர்களை தடுப்பது கடினமாகிறது என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த நவீன உலகத்தில் இது போன்ற தவறுகளை தடுக்க இந்த மாதிரியான விதிமுறைகளை கொண்டு வருவது வியப்பிற்கும் நகைப்பிற்கும் உரியது. தொழில்நுட்ப உதவியுடன் சில வினாடிகளில் ஓட்டுனரின் வரலாற்றினை கொண்டு வரமுடியும்.ஆனால் நமது போக்குவரத்துதுறை அமைச்சர் நம்மை கற்காலத்திற்கு அழைத்து செல்ல கடுமையாக உழைக்கிறார். அமைச்சரின் இந்த புதிய விதியானது ஒரு பயனற்ற மற்றும் மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் ஒன்றாகும். ஆதார்கார்டில் அசல் என்ற ஒன்றே கிடையாது. தமிழக அரசினால் ஒரு ஓட்டுனரின் தகவல் மற்றும் அவரது உரிமத்தின் தற்போதைய நிலை குறித்து வினாடிகளில் அறிய தொழில்நுட்ப உதவிகளுடன் புதிய கருவிகளை உருவாக்க முடியும். தற்போது அபராதம் வசூலிக்கும் பொழுது POS (Point of Sale) தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். அதனோடு உரிமத்தின் நிலையினை அறிய பெரிய அளவிலான தொழில் நுட்பம் தேவையில்லை. இதனை எளிதாக செய்ய முடியும்.

தொழில்முறை வாகன ஓட்டுனர்களின் நடைமுறை சிக்கல்:

தொழில் ரீதியாக வாகனம் ஓட்டும் ஓட்டுனர்கள் தங்களது உரிமத்தை தொலைத்தால் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். புதிய ஓட்டுநர் உரிமம் வாங்க குறைந்தது 20 முதல் 30 நாட்கள் ஆகின்றன. இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க அரசானது தேவையான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்.

புதிய அசல் உரிமம் பெறுவதில் உள்ள சிக்கல்கள்:

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான நடைமுறை எளிதானதல்ல. தொலைந்த ஓட்டுநர் உரிமத்தை இணைய வழியில் பெறுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. உரிமம் தொலைந்தவுடன் காவல் நிலையத்தில் புகாரளித்து CSR மற்றும் FIR பெறவேண்டும். பிறகு ஒரு மாதம் கழித்து தொலைந்த அசல் உரிமம் கிடைக்கவில்லையென்றால் காவல் துறை கண்டுபிடிக்க இயலவில்லை என (Missing Certificate) சான்றிதழ் தரவேண்டும். இந்த சான்றிதழை காவல் துறையிடமிருந்து பெறுவதே மிக கடினமானது மற்றும் பல நாட்களாகும். சில இடங்களில் சில நூறுகளை செலவழிக்கும் சூழலில் மக்கள் தள்ளப்படுகின்றனர். பிறகு இந்த சான்றிதழுடன் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினை அணுகிமேலும் 20 அல்லது 30 நாட்களும் பணமும் செலவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையினை இணைய வழியில் எளிதாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை வைக்கிறது.

வண்டியின் அசல் பதிவு சான்றிதழும் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையினையும் அரசு அறிவிக்கிறது. இது நடைமுறை சாத்தியமல்ல. வண்டியின் முக்கிய சான்றிதழ்களை கையிலோ வண்டியிலோ வைத்திருப்பது சாத்தியமல்ல. ஒரு வேளை வண்டி தொலைந்தால் அசல் பதிவு சான்றிதழ்களும் இல்லாமல் அதன் உரிமையாளர் மிகவும் இன்னலுக்கு ஆளாவார். இது போன்ற பிரச்சனைகளை தடுக்க அரசு என்ன வழிகளை கையில் எடுத்துள்ளது? ஒரு வேளை வண்டி கடனில் பெறப்பட்டால் வண்டியின் உரிமம் கடன் கொடுத்தவரிடமே இருக்கும்.

இது போன்ற புதிய விதிகளால் குடிமக்கள் சந்திக்க நேரிடும் விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கேற்ற மாற்றங்களை செய்ய வேண்டுமென அரசுக்கு சட்டபஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை வைக்கிறது.

சட்டபஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைகள் :

1.   அரசு தொழிநுட்ப ரீதியாக தங்களை வளர்த்து கொண்டு ஓட்டுநர் உரிமத்தின் நிலையை அறிய புதிய கருவிகளை காவல் துறைக்கு வழங்க வேண்டும்.

2.   அசல் உரிமம் கட்டாயம் என கொண்டு வரப்படும் விதிமுறையினால் வரும் புதிய நடைமுறை சிக்கலை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்

3.   ஒரு வேளை உரிமம் தொலைந்தால் கிடைக்கும் வரை அல்லது புதிய உரிமம் பெரும் வரை அந்த ஓட்டுநர் வாகனம் ஓட்ட என்ன செய்ய வேண்டுமென அரசு அறிவிக்க வேண்டும்.

4.   அசல் உரிமத்தை ஓட்டும் பொழுவைத்திருக்க கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக எளிய மற்றும் மிகவும் பயனுள்ள இணையமுறைவழிகளை அரசு பயன்படுத்த வேண்டும். மக்கள் சிரமத்திற்கு உள்ளாக கூடாது.

இந்திய பிரதமர் மின்னணு முறையில் அனைத்தினையும் மாற்ற முயற்சிகள் எடுக்கும் பொழுது நம்மை தமிழக அரசு கற்கால ஆட்சிக்கு அழைத்து செல்ல முயல்வது வருந்தத்தக்கது. இந்த விதிமுறை மக்களுக்கு கற்காலமாகவும் காவல்துறைக்கும் RTO க்கும் பொற்காலமாகவும் அமையும் என்பதால் மாற்று கருத்து இருக்க முடியாது.

சட்டமும் விதிமுறைகளும் மக்களின் வாழ்வினை எளிமை படுத்துவதற்காகவே தவிர மக்களை சிரமப்படுத்த அல்ல.

வைகை ஆற்றுநீரினை சூரியனிடமிருந்து காப்பாற்ற தெர்மக் கோல் விட்டதற்கும் இந்த புதிய போக்குவரத்து விதிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதையாக இருக்கிறது நமது அரசின் செயல்பாடு.

                                                                            சிவ. இளங்கோ
                                   சட்ட பஞ்சாயத்து இயக்கம்
                                   87545-80270

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


​Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Wednesday 30 August 2017

வாசிங்டன் டி.சி. பகுதியில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு!

செய்தி ஆசிரியர் அவர்கள்,
இணைய இதழ்கள், நாளிதழ்கள், ஊடகங்கள்
 
அன்புடையீர், வணக்கம்
சங்க இலக்கியத்தில் "நல்ல குறுந்தொகை" என்று போற்றப்படும் குறுந்தொகைக்கு அமெரிக்கத் தமிழர்கள் மாநாடு எடுத்து ஆய்வு மேற்கொண்ட செய்தியை தங்கள் ஊடகங்களில் பகிர்ந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ... 


வாசிங்டன் டி.சி. பகுதியில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு!

 

ஆகஸ்ட் 26‍-ஆம் நாள் சனிக்கிழமை அன்று மேரிலாந்து மாநிலம் ஒரு புதுமையான தமிழ்விழாவைக் கண்டது!  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையை முறையாக மூன்று ஆண்டுகளாகப் படித்துமுடித்து ஒரு பன்னாட்டு விழா நடைபெற்றது! காலை 9 மணிக்கு,  தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கியது விழா.  அடுத்து குத்து விளக்கு ஏற்றுதலை திருமதி கீதா பிரபாகரன்,  திருமதி ஜெயந்தி சங்கர், திருமதி கல்பனா மெய்யப்பன், நளினி முத்துவேல், இரமா செந்தில்முருகன் முதலியோர் முன்னின்று நடத்தினர்.  தொடர்ந்து வாசிங்டன் தமிழ்ச்சங்க இளையோர் பலர் இணைந்து 'தாய் மொழியே வணக்கம் , 'யாமறிந்த மொழிகளிலே, மற்றும் குறுந்தொகைப் பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆட,  விழா களை கட்டியது. மாநாட்டை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம். வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டம், மற்றம் சில தமிழ் அமைப்புகளும் இணைந்து நடத்தின.  பேரவையின் துணைத் தலைவர் திரு. சுந்தர் குப்புசாமி ஆற்றிய துவக்க உரையில், பன்னாட்டு திருக்குறள் மாநாடு, பன்னாட்டுப் புறநானூறு மாநாடு என்ற வரிசையில் இந்த அமைப்புகள் இணைந்து நடத்தும் மூன்றாவது மாநாடு இது என்று குறிப்பிட்டார். அடுத்ததாக வரவேற்புரை நிகழ்த்தி,  விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை  அறிமுகமும் செய்தார் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் இர. பிரபாகரன்.  குறுந்தொகை சார்ந்து நடத்தப்பட்ட, பாட்டு மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பாடவும் பேசவும் செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தினர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர், திரு. கலியமூர்த்தி IPS (பணி நிறைவு) அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

 

ஆய்வு அமர்வுகள்: 

குறுந்தொகை ஆய்வு பற்றிய முதல் அமர்வில், முனைவர் மருதநாயகம்  'உளவியல் நோக்கில் குறுந்தொகைப் பாடல்களைப்' பற்றியும் முனைவர் நிர்மலா மோகன் 'குறுந்தொகையில் தோழியம்' குறித்தும், முனைவர் முருகரத்தினம் 'செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள்' பற்றியும் பேசினர். மருத்துவர் சோம. இளங்கோவன் நிகழ்ச்சியினை மட்டுறுத்தினார்

 

இரண்டாவது அமர்வில் 'தமிழுக்குப் பெருமை சேர்ப்பதில் விஞ்சி நிற்பது: சங்க இலக்கிய அகப் பாடல்களா?  புறப்பாடல்களா?' என்ற பட்டிமன்றம் பேராசிரியர் மோகன் தலைமையில் சிறப்பாக‌  நடைபெற்றது.  திரு. மயிலாடுதுறை சிவாவும், திருமதி நிர்மலா மோகனும் அணித்தலைவர்களாக இருந்து சிறப்பித்ததனர்.

 

சுவையான மத்திய உணவுக்குப் பிறகு, முனைவர் R.C. சரவணபவன் தலைமையில் நடைபெற்ற மூன்றாவது அமர்வில்,  திரு. பாபு விநாயகம் குறுந்தொகைப் பாடல்களை இசையாக வழங்க,  திரு, பன்னீர்செல்வம், திரு. மகேந்திரன் பெரியசாமி ஆகியோர் குறுந்தொகை சார்ந்து கவிதை மழை பொழிந்தனர்.  திரு. அகத்தியன் பெனடிக்ட்,  குறுந்தொகையில்  'அலர்' என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா போன்று முழங்கினார்.  திரு. மணிக்கண்டன் சங்க இலக்கியம்பற்றி ஒரு சிற்றுரை ஆற்றினார்.

 

குறுந்தொகை கண்ட தலைவனும் தலைவியும் என்ற நிகழ்ச்சியில்,   திருமதி லதா கண்ணன் குறுந்தொகைப் பாடல்களை, தமிழிசையில்  நுட்பமாகப் பாடி எல்லோரையும் மகிழ்வித்தார்

 

நான்காவது அமர்வில் குறுந்தொகையில் கேள்வி பதில் பல்லூடக  நிகழ்ச்சி திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்களின் ஒழுங்கு படுத்தலில் சுமார் 40 பேர் பங்களிப்புடன் சங்க காலத்துக்கே பார்வையாளர்களை எடுத்துச் சென்று மெய்மறக்க வைத்தது.  இந்த நிகழ்ச்சியை முனைவர் இர. பிரபாகரனின் வழிக்காட்டலில், திரு. நாஞ்சில் . பீற்றர் தயாரித்து வழ்ங்கினார். கூடவே மின்னசோட்டா செல்வி அத்விகா சச்சிதானந்தன் "அகம் என்ன ஆகாததா? அகன்று நிற்க!" என்ற தலைப்பில் அருமையான உரையாற்றினார்.  

 

பின்னர் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரபாகரன்  குறுந்தொகையில் உவமை நயம் என்ற தலைப்பில் ஒரு ஆய்வுரை வழங்கினார்.  

 

ஐந்தாவது அமர்வு முனைவர் அரசு செல்லையா தலைமையில்   குறுந்தொகையின் சிறப்பு பற்றி ஆய்ந்தது.  கலைமாமணி இலந்தை இராமசாமி ''குறுந்தொகையில், தோழியே ...வாழியே.." என்ற தலைப்பிலும், பேராசிரியர் மோகன் "நவில்தொறும் நயம் நல்கும் குறுந்தொகை" என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினர்.

 

ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமையவேண்டும் என்பதை, செல்வி மாதவி நடனமாகவும், மருத்துவர்கள் சம்பந்தனும் ஜானகிராமனும் கருத்துக்களாகவும் பதித்தனர்

மாநாட்டு மலரை, மலர் ஆசிரியர் திரு செந்தில் முருகன் முன்னிலையில், திரு. கலியமூர்த்தி வெளியிட்டார். முனைவர் பிரபாகரன் மற்றும் பேராசியர் மோகன் எழுதியஇரண்டு குறுந்தொகை நூல்கள் வெளியிடப்பட்டன

 

மாலையில் விழா சிறப்பு அழைப்பாளர் திரு. கலியமூர்த்தி சங்க இலக்கியங்களை தற்காலத்துடன் இணைத்து ஓர் அருமையான சொற்பொழிவாற்றினார். பார்வையாளர்களைக் கட்டிப்போட்ட அந்த இனிய பேச்சுக்குப்பின் அனைத்து சிறப்பு விருந்தினர்களும், பட்டயம் வழங்கியும், பொன்னாடை போர்த்தியும்  சிறப்பு செய்யப்பட்டன.  செல்வி காவ்யா சுந்தர், மற்றும் உன்னதி மேத்தா இணைந்து 'யாயும் ஞாயும் யாராகியரோ!  நறுமுகையே...! என்ற குறுந்தொகை நடனத்துடன்  தெடர்ந்து ஸ்ரேயா சகோதரிகளின் அழகே தமிழே.. என்ற பாடலுக்கு நடனமாடினர்.  கலைநிகழ்ச்சிகள் கும்மி, ஒயிலாட்டம் என்று களைகட்ட, 'காதல், பிரிதல், இணைதல்' என்ற தலைப்பில்  குறுந்தொகை மையக்  கருத்துக்களோடு சுமார் ஐம்பது பேர் கலந்துகொண்ட, அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்திய  மாபெரும் நடன நிகழ்ச்சி திருமதி புஷ்பராணி வில்லியம்ஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் மிகவும் சிறப்பாக நடந்தது.  பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு இரவு 8:45 மணிக்கு வாசிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. இராசராம் சீனிவாசனின் நன்றிவுரை வழங்கஇனிதே நிறைவு பெற்றது.

 

 

காணொளிகளைக் காண:

www.youtube.com/playlist?list=PL7znEdGz2G7eyVh6GtKWxjYcbUdxehxeI

 


தொடர்புக்கு..
ச.பார்த்தசாரதி