Wednesday 30 August 2017

வாசிங்டன் டி.சி. பகுதியில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு!

செய்தி ஆசிரியர் அவர்கள்,
இணைய இதழ்கள், நாளிதழ்கள், ஊடகங்கள்
 
அன்புடையீர், வணக்கம்
சங்க இலக்கியத்தில் "நல்ல குறுந்தொகை" என்று போற்றப்படும் குறுந்தொகைக்கு அமெரிக்கத் தமிழர்கள் மாநாடு எடுத்து ஆய்வு மேற்கொண்ட செய்தியை தங்கள் ஊடகங்களில் பகிர்ந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ... 


வாசிங்டன் டி.சி. பகுதியில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு!

 

ஆகஸ்ட் 26‍-ஆம் நாள் சனிக்கிழமை அன்று மேரிலாந்து மாநிலம் ஒரு புதுமையான தமிழ்விழாவைக் கண்டது!  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையை முறையாக மூன்று ஆண்டுகளாகப் படித்துமுடித்து ஒரு பன்னாட்டு விழா நடைபெற்றது! காலை 9 மணிக்கு,  தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கியது விழா.  அடுத்து குத்து விளக்கு ஏற்றுதலை திருமதி கீதா பிரபாகரன்,  திருமதி ஜெயந்தி சங்கர், திருமதி கல்பனா மெய்யப்பன், நளினி முத்துவேல், இரமா செந்தில்முருகன் முதலியோர் முன்னின்று நடத்தினர்.  தொடர்ந்து வாசிங்டன் தமிழ்ச்சங்க இளையோர் பலர் இணைந்து 'தாய் மொழியே வணக்கம் , 'யாமறிந்த மொழிகளிலே, மற்றும் குறுந்தொகைப் பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆட,  விழா களை கட்டியது. மாநாட்டை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம். வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டம், மற்றம் சில தமிழ் அமைப்புகளும் இணைந்து நடத்தின.  பேரவையின் துணைத் தலைவர் திரு. சுந்தர் குப்புசாமி ஆற்றிய துவக்க உரையில், பன்னாட்டு திருக்குறள் மாநாடு, பன்னாட்டுப் புறநானூறு மாநாடு என்ற வரிசையில் இந்த அமைப்புகள் இணைந்து நடத்தும் மூன்றாவது மாநாடு இது என்று குறிப்பிட்டார். அடுத்ததாக வரவேற்புரை நிகழ்த்தி,  விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை  அறிமுகமும் செய்தார் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் இர. பிரபாகரன்.  குறுந்தொகை சார்ந்து நடத்தப்பட்ட, பாட்டு மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பாடவும் பேசவும் செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தினர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர், திரு. கலியமூர்த்தி IPS (பணி நிறைவு) அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

 

ஆய்வு அமர்வுகள்: 

குறுந்தொகை ஆய்வு பற்றிய முதல் அமர்வில், முனைவர் மருதநாயகம்  'உளவியல் நோக்கில் குறுந்தொகைப் பாடல்களைப்' பற்றியும் முனைவர் நிர்மலா மோகன் 'குறுந்தொகையில் தோழியம்' குறித்தும், முனைவர் முருகரத்தினம் 'செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள்' பற்றியும் பேசினர். மருத்துவர் சோம. இளங்கோவன் நிகழ்ச்சியினை மட்டுறுத்தினார்

 

இரண்டாவது அமர்வில் 'தமிழுக்குப் பெருமை சேர்ப்பதில் விஞ்சி நிற்பது: சங்க இலக்கிய அகப் பாடல்களா?  புறப்பாடல்களா?' என்ற பட்டிமன்றம் பேராசிரியர் மோகன் தலைமையில் சிறப்பாக‌  நடைபெற்றது.  திரு. மயிலாடுதுறை சிவாவும், திருமதி நிர்மலா மோகனும் அணித்தலைவர்களாக இருந்து சிறப்பித்ததனர்.

 

சுவையான மத்திய உணவுக்குப் பிறகு, முனைவர் R.C. சரவணபவன் தலைமையில் நடைபெற்ற மூன்றாவது அமர்வில்,  திரு. பாபு விநாயகம் குறுந்தொகைப் பாடல்களை இசையாக வழங்க,  திரு, பன்னீர்செல்வம், திரு. மகேந்திரன் பெரியசாமி ஆகியோர் குறுந்தொகை சார்ந்து கவிதை மழை பொழிந்தனர்.  திரு. அகத்தியன் பெனடிக்ட்,  குறுந்தொகையில்  'அலர்' என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா போன்று முழங்கினார்.  திரு. மணிக்கண்டன் சங்க இலக்கியம்பற்றி ஒரு சிற்றுரை ஆற்றினார்.

 

குறுந்தொகை கண்ட தலைவனும் தலைவியும் என்ற நிகழ்ச்சியில்,   திருமதி லதா கண்ணன் குறுந்தொகைப் பாடல்களை, தமிழிசையில்  நுட்பமாகப் பாடி எல்லோரையும் மகிழ்வித்தார்

 

நான்காவது அமர்வில் குறுந்தொகையில் கேள்வி பதில் பல்லூடக  நிகழ்ச்சி திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்களின் ஒழுங்கு படுத்தலில் சுமார் 40 பேர் பங்களிப்புடன் சங்க காலத்துக்கே பார்வையாளர்களை எடுத்துச் சென்று மெய்மறக்க வைத்தது.  இந்த நிகழ்ச்சியை முனைவர் இர. பிரபாகரனின் வழிக்காட்டலில், திரு. நாஞ்சில் . பீற்றர் தயாரித்து வழ்ங்கினார். கூடவே மின்னசோட்டா செல்வி அத்விகா சச்சிதானந்தன் "அகம் என்ன ஆகாததா? அகன்று நிற்க!" என்ற தலைப்பில் அருமையான உரையாற்றினார்.  

 

பின்னர் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரபாகரன்  குறுந்தொகையில் உவமை நயம் என்ற தலைப்பில் ஒரு ஆய்வுரை வழங்கினார்.  

 

ஐந்தாவது அமர்வு முனைவர் அரசு செல்லையா தலைமையில்   குறுந்தொகையின் சிறப்பு பற்றி ஆய்ந்தது.  கலைமாமணி இலந்தை இராமசாமி ''குறுந்தொகையில், தோழியே ...வாழியே.." என்ற தலைப்பிலும், பேராசிரியர் மோகன் "நவில்தொறும் நயம் நல்கும் குறுந்தொகை" என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினர்.

 

ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமையவேண்டும் என்பதை, செல்வி மாதவி நடனமாகவும், மருத்துவர்கள் சம்பந்தனும் ஜானகிராமனும் கருத்துக்களாகவும் பதித்தனர்

மாநாட்டு மலரை, மலர் ஆசிரியர் திரு செந்தில் முருகன் முன்னிலையில், திரு. கலியமூர்த்தி வெளியிட்டார். முனைவர் பிரபாகரன் மற்றும் பேராசியர் மோகன் எழுதியஇரண்டு குறுந்தொகை நூல்கள் வெளியிடப்பட்டன

 

மாலையில் விழா சிறப்பு அழைப்பாளர் திரு. கலியமூர்த்தி சங்க இலக்கியங்களை தற்காலத்துடன் இணைத்து ஓர் அருமையான சொற்பொழிவாற்றினார். பார்வையாளர்களைக் கட்டிப்போட்ட அந்த இனிய பேச்சுக்குப்பின் அனைத்து சிறப்பு விருந்தினர்களும், பட்டயம் வழங்கியும், பொன்னாடை போர்த்தியும்  சிறப்பு செய்யப்பட்டன.  செல்வி காவ்யா சுந்தர், மற்றும் உன்னதி மேத்தா இணைந்து 'யாயும் ஞாயும் யாராகியரோ!  நறுமுகையே...! என்ற குறுந்தொகை நடனத்துடன்  தெடர்ந்து ஸ்ரேயா சகோதரிகளின் அழகே தமிழே.. என்ற பாடலுக்கு நடனமாடினர்.  கலைநிகழ்ச்சிகள் கும்மி, ஒயிலாட்டம் என்று களைகட்ட, 'காதல், பிரிதல், இணைதல்' என்ற தலைப்பில்  குறுந்தொகை மையக்  கருத்துக்களோடு சுமார் ஐம்பது பேர் கலந்துகொண்ட, அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்திய  மாபெரும் நடன நிகழ்ச்சி திருமதி புஷ்பராணி வில்லியம்ஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் மிகவும் சிறப்பாக நடந்தது.  பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு இரவு 8:45 மணிக்கு வாசிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. இராசராம் சீனிவாசனின் நன்றிவுரை வழங்கஇனிதே நிறைவு பெற்றது.

 

 

காணொளிகளைக் காண:

www.youtube.com/playlist?list=PL7znEdGz2G7eyVh6GtKWxjYcbUdxehxeI

 


தொடர்புக்கு..
ச.பார்த்தசாரதி

No comments:

Post a Comment