Friday 27 January 2017

Farmer Association Petition to Drought verification Committee..வறட்சி நிலையை ஆராய வந்திருக்கும் மத்திய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் விவசாய சங்கங்களின் மனு...

Sir,

Attached the representation given by farmer association to central committee who came to verify the historical drought in Tamilnadu.

Satta Panchayat Iyakkam                                                                                                                                        

                                                                                                                                                     24-01-2017

அனுப்புனர்:
ஆறுபாதி கல்யாணம்,
பொதுச்செயலாளர் ,
விவசாய சங்கங்களின் கூட்டமைப்புகாவிரி டெல்டா மாவட்டங்கள்
9443093447


To:
Ms Vasudha Misra I.A.S -Managing Director,
National Cooperative Development Corporation

New Delhi - deputed as Chairman -Inter Ministerial Team to Assess Drought in Tamilnadu &
Team Members ,  mdncdc@ncdc.in


வணக்கம்
. தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி நிலையை ஆராய வந்திருக்கும் மத்திய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பார்வைக்கு எங்களுடைய மனு கீழே:

1. தமிழகம் ஒரு நூற்றாண்டில் கண்டிராத மாபெரும் வறட்சி நிலையைச் சந்தித்து வருகிறது. மாநில அரசு தம்முடைய கோரிக்கையை முன்பே இந்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. இம்மனுவில், தேசிய பேரிடர் காப்பு நிதியில் இருந்து ரூ.39,565 கோடி தமிழக வறட்சி நிவாரணத்திற்கு ஒதுக்கச் சொல்லிக் கோரியுள்ளது.


இது போலவே வேளாண் பயிர்களின் அழிவு குறித்தும் மாநில அரசு டிசம்பர் 2016-ல் பயிரிடல் ஆவணங்களை கொடுத்துள்ளது. தற்போது ராபி மற்றும் சம்பா கதிர் மற்றும் எண்ணை  விதைகள்  விதைக்கும் பரப்பளவு 15.04 லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துள்ளது.சென்ற வருடம் இது 21.42 ஹெக்டேர்களாக இருந்தது. இதுவே தமிழகத்தில் நிலவி வரும் கொடும் வறட்சியைப் பறைசாற்றுகிறது. இவ்வாறு பயிரிடப்பட்ட பகுதிகள் சராசரி விளைச்சலில் 30 சதவிகிதம் கூட இம்முறை தராது. இதோடு நிலத்தடி நீரளவு குறைவின் காரணமாக கரும்பு மற்றும் பிற தோட்டப் பயிர்களும் பெருமளவு தோல்வியுற்றள்ளன. தமிழகத்தில் மொத்த விளை நிலம் தற்போது 47 லட்சம் ஹெக்டேர்கள் மட்டுமே. வருவாய்த் துறையின் கிராம ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்விளைநிலம் மொத்தமும் தேசிய பேரிடர் காப்பு நிதியின் கீழ் நிவாரணத்திற்கு தகுதியுள்ளவையாகக் கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய அரசு குழுவை கேட்டுக் கொள்கிறோம்.


2. வறட்சியினால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அறியப்படும் காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் மற்றும் அதிர்ச்சி மரணங்கள் அதிகரித்தபடி வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 250 மரணங்கள் மற்றும் தற்கொலைகள் இவ்வாறு நிகழ்ந்துள்ளன. ஆனால் மாநில அரசு 17 தற்கொலைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள் நாட்டிற்கே அவமானம். எனவே உண்மையான எண்ணிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று கோருகிறோம். அதோடு இறந்த ஒவ்வொரு விவசாயியின் குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட வேண்டும் என்று கோருகிறோம்.


3. காவேரி டெல்டா பகுதிகளில் நேரடியாக நெல் விதைக்கும் விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் பயிர் பொய்த்துள்ளது. சம்பாவாக மாற்றப்பட்ட பயிர்களும் காவேரி நீரை நம்பி இருப்பதால் பொய்த்துள்ளது. கிட்டத்தட்ட 3 லட்சம் ஏக்கர்களுக்கு வேளாண்மை மின்சார பம்புசெட்டுக்களை வைத்து செய்யப்படுகின்றது. காவேரி டெல்டா பகுதியில் சராசரி விளைச்சல் ஒரு ஏக்கருக்கு 1800 கிலோவில் இருந்து 2100 கிலோ வரை பொதுவாக கிடைக்கும். ஆனால் தற்போது 700 கிலோவில் இருந்து 1000 கிலோ வரை மட்டுமே விளைச்சல் கிடைக்கிறது. ஆக சராசரி விளைச்சலை விட 33% க்கு மேல் நஷ்டமடைவதால் தேசிய பேரிடர் காப்பு நிதி விதிகளின்படி டெல்டா பகுதியில் அனைத்து விவசாயிகள் மற்றும் நேரடி நெல் விதைத்தல் மற்றும் மாற்று விதைத்தல் பகுதிகள் அனைத்தும் உள்ளீட்டு மானியத்திற்கு தகுதியுடையவை ஆகின்றன.


4. தேசிய பேரிடர் காப்பு நிதி விதிகளின்படி விவசாய நஷ்டத்திற்கு உள்ளீட்டு மானியம் தற்போது (மானாவாரிப் பயிர்களுக்கு) ஒரு ஹெக்டேருக்கு ரூ.6800 ஆகும். இதுவே பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, மற்றும் நீண்டகாலப்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.18,000 என்று விதிக்கப்பட்டுள்ளது. இந்த மானியம் மிகக் குறைவானது. எனவே இந்திய அரசை, குறைந்தபட்ச உள்ளீட்டு மானியத்தை ஏக்கருக்கு ரூ.30,000 என்று உயர்த்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.


5. உடனடியாக காவேரி மேலாண்மை வாரியம், ஒரு சுதந்திரமான அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும். இது காவேரி டெல்டா பகுதியில் விவசாயிகள் மற்றும் உணவு பொருள் உற்பத்தியைக் காக்க மிகவும் அவசியமான நடவடிக்கையாகும்

 


6. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டம் முந்தைய தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை விடச் சில வகைகளில் சிறந்ததே என்றாலும் விவசாயிகளைக் காப்பாற்ற தலை சிறந்த திட்டமாகாது. இந்த மொத்தக் காப்பீட்டுத் திட்டமும் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தம்முடைய லாப நோக்கிலேயே செயல்படும். தனிப்பட்ட விவசாயி ஒவ்வொருவருக்கும் காப்பீடு (14 கோடி விவசாயிகளுக்கும்) அளிப்பதே சிறந்த தீர்வாகும்.

 

7. வட்டியில்லா பயிர் கடன்கள் மற்றும் அனைத்து வேளாண் கடன்களும் 4% எளிய வட்டி என்று வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படக் கோருகிறோம். அதிக வட்டியே விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கியக் காரணம்.


8. குறைந்தபட்ச சலுகை விலை, 50% லாபம் தருமாறு அனைத்து வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கும் நிர்ணயம் செய்தல் வேண்டும். ஒவ்வொரு ஹெக்டேர்/மற்றும் ஏக்கர் நேரடி மானியம் (பயிரிடல் ஆவணங்களின்படி) அனைத்து விவசாயிகளுக்கும் கொடுப்பதே அவர்களை காப்பாற்றும்.


9. மத்திய அரசு, வேளாண் அமைச்சகத்தை "வேளாண்மை மற்றும் விவசாய நலன் அமைச்சகம்" என்று மாற்றியுள்ளது. வெறும் பெயர் மாற்றம் பலன் தராது. அடிப்படை மாற்றங்கள் தேவை. தனி பட்ஜெட்டின் மூலமாக வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகள் நலன் ஆகியவற்றைப் பாதுகாக்க கோருகிறோம்.


10. தேசிய பேரிடர் காப்பு நிதிக்கு சரியானபடி நிதி ஒதுக்கீடு செய்யாததால், மத்திய அரசால் மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிதி அளிக்க முடிவதில்லை. 2016-2017 பட்ஜெட்டில் இந்நிதிக்கு வெறும் ரூ.6450 கோடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வருடம் தமிழ்நாடு அரசின் கோரிக்கையோ ரூ.39,565 கோடிகள். இந்நிலையில் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கு எப்படி மத்திய அரசால் நிதி அளிக்க முடியும்? மத்திய அரசு இந்நிதியின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து 2002-03 முதல் 2011-12 வரை பத்து வருடங்களில் ரூ.23,346 கோடிகள் செலவழித்துள்ளது. ஆனால் இந்தியாவில் பயிர் பொய்த்தலால் மட்டுமே ஒரு வருடத்திற்கு ரூ.40,000 கோடிகளில் இருந்து ரூ.50,000 கோடிகள் வரை நஷ்டம அடைகிறோம். எனவே மத்திய குழுவை இந்நிதிக்கு தகுந்த நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த பத்து கோரிக்கைகளும் மத்திய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எங்கள் மனுவாகும். மாண்புமிகு தமிழ்நாடு வேளாண் துறை செயலர் மற்றும் காவேரி டெல்டா பகுதி மாவட்ட கலெக்டர்கள் இம்மனுவை மத்திய குழுவிற்கு அளிக்குமாறும், தமிழக விவசாயிகளைக் காக்க தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.


இப்படிக்கு,
ஆறுபாதி கல்யாணம்,
பொதுச்செயலாளர் ,
விவசாய சங்கங்களின் கூட்டமைப்புகாவிரி டெல்டா மாவட்டங்கள்
9443093447

Monday 23 January 2017

PRESS RELEASE - கிராம பஞ்சாயத்துக்குத் தேர்தலுக்காக கிராம சபை தீர்மானம்.

PRESS RELEASE

நடைபெறாமல் உள்ள கிராம பஞ்சாயத்துக்கான தேர்தல் விரைவாக நடைபெற கிராம மக்கள் என்ன செய்ய முடியும்?

ஒரு பஞ்சாயத்துக்கு உட்பட்ட நிர்வாகம், வளர்ச்சி, மக்களின் பாதுகாப்பு, கலாச்சாரம் போன்ற விஷயங்களில் முடிவெடுக்க அதிகாரம் கொண்ட அமைப்பு  கிராம சபை. பஞ்சாயத்தின் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் அதன் பெருமைமிகு அங்கத்தினர். தற்போது கிராமசபை பற்றிப் பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையில், வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. 

உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாமல் காலம் கடந்து போகிறது. பஞ்சாயத்துக்கான தேர்தல் மேலும் காலம் கடத்தப்படாமல் விரைவாக நடத்தப்படுவதற்குக் கிராம சபையே மக்கள் கையில் இருக்கும் வாய்ப்பு. "விரைவாக எங்கள் கிராம பஞ்சாயத்துக்குத் தேர்தல் நடத்திட வேண்டும்" எனக் கேட்பதற்கான முழு அதிகாரம் பெற்ற அமைப்பு கிராம சபை. 

தங்கள் கிராம பஞ்சாயத்துக்கான தேர்தலை விரைவாக நடத்தக்கோரி  ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மக்களும் கிராம சபையில்  தீர்மானம் நிறைவேற்றி  அதன் நகலை மூன்று நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிட வேண்டும். அதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
 
உள்ளாட்சி தேர்தல் நடத்தவேண்டும் ​என்று தீர்மானம் நிறைவேற்றலாம். ஆனால் அது அந்தப் பஞ்சாயத்து மக்களுக்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்படுத்தாத ஒன்று என்பதால் அக்கோரிக்கை ஏற்புடையதாக இருக்காது. மாறாக ​​எங்கள்  கிராம பஞ்சாயத்துக்கான தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற மக்களின் தீர்மானம் 100% ஏற்புடைய தீர்மானமாக இருக்கும். 

ஒரு​வகையில், முறையான ​ஒரு ​கிராம சபை தீர்மானம் வாக்கு சீட்டுக்கு இணையானது என்று கூட சொல்லலாம். கிராம மக்களுக்கு கிராம சபை பற்றியும், அவர்கள் வருகின்ற ஜனவரி 26 அன்று நடக்க இருக்கின்ற கிராம சபையில் பங்கெடுத்து மேற்குறிப்பிட்ட தீர்மானம் நிறைவேற்றி பயன்பெற உதவுங்கள். நன்றி.

தங்கள் உண்மையுள்ள 

உள்ளாட்சி உங்களாட்சி, 
69, அங்கப்ப நாயக்கன் தெரு, 
சென்னை - 01 
போன் : 9710230036



Thursday 12 January 2017

100 நாள் வேலை - செப்டம்பர் மாதம் முதல் ஒரு ரூபாய் கூட சம்பளம் கிடைக்கவில்லை !

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் 100 நாள் வேலைப் பணியாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்கவில்லை. ஆனால்   தற்போதும் சம்பளம் வரும் என்ற நம்பிக்கையோடு 100 நாள் வேலையைச் செய்து வருகிறார்கள் கிராம மக்கள். 

கிராமப்புறங்களில் 100 நாள் வேலை, ஏரி வேலை, குட்டை வேலை என அழைக்கப்படும் தேசிய ஊராக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2005 முதல் நடைமுறையில் இருக்கிறது. துவக்கத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்ட இத்திட்டம், பிறகு படிப்படியாக நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தில் நாம் கவனிக்க வேண்டியது, இது வெறும் திட்டமல்ல மாறாக இது ஒரு சட்டம் என்பதுதான். ஆம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் 2005 ல் இயற்றப்பட்டு அதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட திட்டம் இது.

கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும், அதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் நெடுநாளையா கோரிக்கை 2005 ல் நிறைவேறியது. நாடாளுமன்றத்தில் சட்டமாக கொண்டுவரப்பட்டது. அன்று முதல் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு பெறுவது ஒவ்வொரு கிராமப்புற இந்தியரின் உரிமை என்றானது.

ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் முதல், தமிழகத்தில் இத்திட்ட பணியாளர்கள் யாருக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை. லட்சக்கணக்கான கிராம மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நம்மில் பலர் இத்திட்டத்தின் நடைமுறைகள் குறித்த பல மாற்றுக் கருத்துக்கள் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் எளிய மக்களிடம், கூலி தருவதாகச் சொல்லி வேலை வாங்கி விட்டு மாதக்கணக்கில் ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்கவில்லை என்பதை எப்படிப் பார்ப்பது.


இது குறித்த கட்டுரை நேற்றைய தமிழ் இந்து நாளிதழில். அதை இத்துடன் இணைத்துள்ளோம்.


கிராம மக்கள், அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட கூலியைப் பெற நீங்கள் நிச்சயம் பங்காற்றிட முடியும் என நம்புகிறேன். நன்றி.


நந்தகுமார் 

உள்ளாட்சி உங்களாட்சி 

9710230036 


Friday 6 January 2017

PRESS RELEASE on JALLIKATTU.. மிருகவதைச் சட்டப்பிரிவு 22, 28ல் திருத்தம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்ய வேண்டும்..

PRESS RELEASE on JALLIKATTU by Satta Panchayat Iyakkam.

 மிருகவதைச் சட்டப்பிரிவு 22, 28ல் திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...

சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை

பத்திரிகை செய்தி

07.01.2017

87545-80270, 87545-80274
 

கடந்த 2014 ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு, தடை நீக்கம் செய்யக்கோரி தமிழக அரசும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், மத்திய அரசும் பிஜேபியின் தமிழக தலைவர்களும் சட்டரீதியிலான சரியான நடவடிக்கைகள் எடுக்காமல் முந்தைய ஆட்சியாளர்களைக் குற்றம்சாட்டி காலம் கடத்தி வருகின்றனர்.

 

2006-ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆரம்பித்த ஜல்லிக்கட்டு பிரச்சினை கடந்த பத்து ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகளின் தவறான சட்ட அணுகுமுறையால் தடைபட்டு கிடக்கின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த அனுமதி கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் காளைகள் சம்பந்தப்பட்ட அனைத்து விளையாட்டுக்களுக்கும் 2006ல் தடை விதித்து  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. அதே ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தத் தடை நீக்கப்பட்டாலும், இந்திய விலங்குகள் நல வாரியம் (AWBI – Animal Welfare Board of india) தொடுத்த மேல்முறையீட்டால் 2007ல் உச்சநீதிமன்றம் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால அனுமதி கிடைத்தது. இந்த சூழ்நிலையில், 2011ம் ஆண்டில்(11.07.2011) மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தினால்(காங்கிரஸ் ஆட்சியில்) காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டது. ஏற்கனவே 2009ல் "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தின்படி" (Tamilnadu Regulation of Jallikattu act 2009)  ஜல்லிக்கட்டுக்கான சட்டப்பூர்வ  வடிவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் , இந்த சட்டத்தை தடைசெய்யக் கோரி பீட்டா (PETA – People for the Ethical Treatment of Animals) எனும் அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

 

இந்திய விலங்குகள் நலவாரியம்(AWBI) மற்றும் பீட்டா(PETA) ஆகிய இரு தரப்பினரும் தொடர்ந்திருந்த  ஜல்லிக்கட்டு தொடர்பான இந்த வழக்குகளுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தின் மாட்டு வண்டிகள் போட்டிக்கான வழக்குகளுக்கும் ஒரு சேர  07.05.2014ல் இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், காளைகள் சம்பந்தப்பட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் தடை விதித்து தீர்ப்பளித்தது. கூடவே தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டம்2009 என்பது தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் என்றாலும், அது  மிருகவதை தடை சட்டம் (Prevention of Cruelty to Animals) 1960-ஐ மீறும் வகையில் உள்ளதால், அதனையும் ரத்து செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்த சட்ட சிக்கல் காரணமாக 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடத்தப்படவில்லை.

 

இந்நிலையில் கடந்த ஆண்டு(2016) ஜனவரி 8-ல்,  ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் அதே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மூலம் புதிய ஆணை ஒன்றை வெளியிட்டது. இதனை எதிர்த்து மீண்டும் AWBI மற்றும் பிற விலங்குகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு இடைக்காலத் தடை பெற்றது.

 

தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரும் சீராய்வு மனுவையும் கடந்த நவம்பர் மாதம் (2016) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

 

ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு உள்ள சட்ட ரீதியிலான தடை இன்னும் நீடிக்கிறது.    எனவே, இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தர இருக்கும் தீர்ப்பை ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
 

கடந்த ஆண்டு, 'மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஆணையானது உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்படலாம்' என்ற அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கியின் எச்சரிக்கையையும் மீறி கடைசி தருணத்தில் தவறான முறையில் அவசர ஆணையை வெளியிட்டதால்தான் நீதிமன்றத்தில் அவ்வாணை தடையை சந்தித்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

தற்போது இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் முன்னரே பொங்கல் பண்டிகையும் நெருங்கிவிட்டது என்ற நிலையில் தமிழ் மக்களின் உணர்வு தொடர்பான இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொறுப்புடன் செயல்பட்டு, சட்டரீதியிலான சரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்துகிறது.

 

நீதிமன்றக் கதவுகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு  , இதுவரை  'மிருகவதை தடைச் சட்டத்தில்' ((Prevention of Cruelty to Animals, 1960)  உரிய திருத்தம் கொண்டுவராததற்கு தன் கட்சியினரைத்தான் தமிழக பாஜகவினர் குற்றம் சொல்ல வேண்டும். பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை நாடாளுமன்ற அவைகளில் இதற்கு எந்த முன்முயற்சியும் எடுக்காமல் சாக்குப்போக்கு சொல்லி காலம் கடத்திவரும் பாஜகவினரை சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்டிக்கிறது.


காளைகளைக் கொடுமைப்படுத்துதல் என்று சொல்லப்படும் நிகழ்வுகள் ஏதுமின்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என்பதிலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகுக்கப்பட்டுள்ள பிற விதிமுறைளைப் பின்பற்றி இது நடத்தப்படவேண்டும் என்பதிலும் இருவேறு கருத்திற்கு இடமில்லை. சில விதிமுறைகள் மீறப்படுகிறது என்பதற்காக ஜல்லிக்கட்டையே தடை செய்வது நியாயமில்லை. சாலைகள் போடப்படுவதில், பாலங்கள் கட்டப்படுவதில் முறைகேடுகள், ஊழல் நடப்பது தொடர் செயலாகத்தான் இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்காக, சாலைகள்-பாலங்கள் கட்டுவதற்கு ஒட்டுமொத்த தடைவிதித்து விடுவோமா என்ன..?  முறைகேடுகள் இன்றி விதிமுறைகளின்படி சாலைகள்-பாலங்கள் கட்டப்படவேண்டும் என்று கோருவதுதானே நியாயமாக இருக்கும். இந்த அணுகுமுறைதான் ஜல்லிக்கட்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதே இயக்கத்தின் நிலைப்பாடு.


உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இனியும் நீதிமன்றங்களை கைக்காட்டாமல்  'மிருகவதைச் தடைச் சட்டம் 1960'  பிரிவு 22 (Restriction on exhibition of performing animals) மற்றும் 28-களில் (Saving as respects manner of killing prescribed by religion) உரிய திருத்தங்களை அவசரச் சட்டமாகக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்துகிறது. இப்படிப்பட்டதொரு அவசரச்சட்டம் இயற்றப்பட்டால்தான் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கான தடை எந்தச் சிக்கலுமின்றி உடைபடும்.

 

தமிழக கட்சிகளும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிராமல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தைக் கொண்டு பிரதமர் மோடியை இந்த அவசர சட்டத்தை கொண்டுவர நிர்பந்திக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். தமிழக இளைஞர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் இப்பிரச்சனையின் பின்னணியில் உள்ள சட்ட நுணுக்கங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய  மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

 

                                                                                                                           

                                                                                                  சிவ.இளங்கோ,                  
                                                       தலைவர்

                                                         சட்ட பஞ்சாயத்து இயக்கம்

                                                           87545-80270, 87545-80274

Thursday 5 January 2017

Survey about Sasikala-Results..சசிகலா...ஏகோபித்த ஆதரவு என்பது கட்டமைக்கப்பட்ட மாயை..

சசிகலா – முதல்வராவதற்கு 97% மக்கள் எதிர்ப்பு…   

 ஆளுங்கட்சி பொதுச்செயலாளர் ஆனதற்கு 94% மக்கள் எதிர்ப்பு…
 ஏகோபித்த ஆதரவு என்பது கட்டமைக்கப்பட்ட மாயை

       

                     சட்ட பஞ்சாயத்து இயக்கக்
              கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு
                             05-01-2017

                                 87545-80270, 87545-80274


முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பின்னர் சசிகலா அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும், அவரே முதலமைச்சர் ஆகவேண்டும் என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கருத்தறிவதற்காக இணைய தளம் மூலம் சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது.  அதிமுக பொதுக்குழு நடப்பதற்கு முந்தைய நாளான டிசம்பர் 28, 2016 முதல் ஜனவரி 1, 2017 வரை நடத்தப்பட்ட இக்கருத்துக்கணிப்பின் முடிவுகளை இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடுகிறோம். ( இணைப்பில் விரிவான விவரங்கள் )


இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளிலிருந்து சசிகலா அவர்களுக்கு கட்சியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு இருப்பதாக வெளியான செய்திகள் திட்டமிட்டு, கட்டமைக்கப்பட்ட ஒரு மாயை என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரியவருகிறது. இதையெல்லாம் மதிக்காமல் சசிகலா அவர்கள் முதலமைச்சராக ஆசைப்படுகிறார்  என்றால் அது ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் அநீதி; ஓட்டுப்போட்ட மக்களுக்கு செய்யும் பெருந்துரோகம் என்பதே இயக்கத்தின் கருத்து.


                  கருத்துக்கணிப்பு குறித்த விவரங்கள்…

கருத்துக்கணிப்பு துவங்கிய நாள்:  28-12-2016
கருத்துக்கணிப்பு முடிந்த நாள்:  01-01-2017
கருத்துக்கணிப்பு வழிமுறை: இணைய தளம் மூலமாக


சென்னை, கோவை, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து அதிகம் பேர் வாக்களித்துள்ளனர். மேலும், நீலகிரி, பெரம்பலூர், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் குறைவான வாக்குப்பதிவாகி உள்ளது. 20 வயது முதல் 40 வயது வரை 72 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்..         


பங்கு பெற்றவர்கள்: 3090                      

பங்கேற்ற மாவட்டங்கள்: 32 (தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும்)

சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் - எதிர்ப்பு    :  2916 ( 94% )

ஆதரவு : 174 ( 6% )

சசிகலா முதலமைச்சர் ஆவதற்கு 
எதிர்ப்பு : 2984 ( 97% )

ஆதரவு: 106 ( 3% )


           சட்ட பஞ்சாயத்து இயக்கம்
             87545-80270, 
87545-80274






சிவ.இளங்கோ,                          

                                                              தலைவர்


                                                                   87545-80270, 87545-80274









​கருத்துக்கணிப்பு  லிங்க்:  https://goo.gl/d1B3Sw

நீதி மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தி டாஸ்மாக் கடையை அகற்றக்கோரும் கண்டன ஆர்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் ​மணக்கால் ​கிராம பஞ்சாயத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கடையை அகற்றக்கோரி தொடர்முயற்சியில் ஈடுபட்டு வரும் அக்கிராம மக்கள், இன்று அக்கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாயத்துத் தீர்மானத்தை ஏற்று டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை (16.11.2016) நடைமுறைப்படுத்தத் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார் மணக்கால் கிராமத்தின் தென்னரசு. தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை (கடை எண் 9711) அகற்றக்கோரி மணக்கால் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்துடன் வைக்கப்பட்டது இக்கோரிக்கை.

உரிய முறையில் அரசுக்கு மனு அளித்தல், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை, மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு விண்ணப்பம், தொடர் அடையாள உண்ணாவிரதம் எனப் பல அறப்போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய ஆர்ப்பாட்டம்​ ​நடைபெற்றது.

நீரின்றி பயிர்கள் வாடிவரும் நிலையிலும் திருவாரூர் மாவட்டத்தின் இக்கிராம மக்கள் தெருவில் இறங்கிப் போராடினர். இப்போராட்டத்தை ஒருங்கிணைத்த தென்னரசு கூறுகையில், "எங்கள் கிராம மக்களுக்குப் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது இந்த டாஸ்மாக் கடை. பலர் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடை மேலும் மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது... இன்றைக்குக்  கிராம மகளிர் பலர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்....​மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமென நம்புகிறோம்" என்றார் 


தங்கள் உண்மையுள்ள 
உள்ளாட்சி உங்களாட்சி 
9710230036



மணக்கால் பஞ்சாயத்து - டாஸ்மாக் கடையை அகற்றக்கோரும் கண்டன ஆர்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் ​மணக்கால் ​கிராம பஞ்சாயத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை (எண்:9711) அகற்றக்கோரி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கடையை அகற்றக்கோரி தொடர்முயற்சியில் ஈடுபட்டு வரும் அக்கிராம மக்கள், இன்று அக்கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிய முறையில் அரசுக்கு மனு அளித்தல், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை[டாஸ்மாக் கடையை அகற்றக்கோரும் பஞ்சாயத்து தீர்மானம் இருந்தால் மதுபானக்கடையை நிரந்தரமாக அகற்றலாம் என்று கடந்த 16.11.2016 அன்று உயர் நீதி மன்றம் உத்தரவு], மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு விண்ணப்பம், தொடர் அடையாள உண்ணாவிரதம் எனப் பல அறப்போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய ஆர்ப்பாட்டம்
​ ​நடைபெற்றது.

நீரின்றி பயிர்கள் வாடிவரும் நிலையிலும் திருவாரூர் மாவட்டத்தின் இக்கிராம மக்கள் தெருவில் இறங்கிப் போராடினர்.  

இப்போராட்டத்தை ஒருங்கிணைத்த தென்னரசு கூறுகையில், "எங்கள் கிராம மக்களுக்குப் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது இந்த டாஸ்மாக் கடை. பலர் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடை மேலும் மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது... இன்றைக்குக்  கிராம மகளிர் பலர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்....
​மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமென நம்புகிறோம்
" என்றார் 


தங்கள் உண்மையுள்ள 
உள்ளாட்சி உங்களாட்சி 
9710230036