Thursday 5 January 2017

நீதி மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தி டாஸ்மாக் கடையை அகற்றக்கோரும் கண்டன ஆர்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் ​மணக்கால் ​கிராம பஞ்சாயத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கடையை அகற்றக்கோரி தொடர்முயற்சியில் ஈடுபட்டு வரும் அக்கிராம மக்கள், இன்று அக்கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாயத்துத் தீர்மானத்தை ஏற்று டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை (16.11.2016) நடைமுறைப்படுத்தத் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார் மணக்கால் கிராமத்தின் தென்னரசு. தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை (கடை எண் 9711) அகற்றக்கோரி மணக்கால் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்துடன் வைக்கப்பட்டது இக்கோரிக்கை.

உரிய முறையில் அரசுக்கு மனு அளித்தல், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை, மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு விண்ணப்பம், தொடர் அடையாள உண்ணாவிரதம் எனப் பல அறப்போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய ஆர்ப்பாட்டம்​ ​நடைபெற்றது.

நீரின்றி பயிர்கள் வாடிவரும் நிலையிலும் திருவாரூர் மாவட்டத்தின் இக்கிராம மக்கள் தெருவில் இறங்கிப் போராடினர். இப்போராட்டத்தை ஒருங்கிணைத்த தென்னரசு கூறுகையில், "எங்கள் கிராம மக்களுக்குப் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது இந்த டாஸ்மாக் கடை. பலர் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடை மேலும் மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது... இன்றைக்குக்  கிராம மகளிர் பலர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்....​மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமென நம்புகிறோம்" என்றார் 


தங்கள் உண்மையுள்ள 
உள்ளாட்சி உங்களாட்சி 
9710230036



No comments:

Post a Comment