Friday 16 February 2018

காவிரி தீர்ப்பு - பத்திரிகை செய்தி

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

பத்திரிகைசெய்தி (16-02-2018)

தொடர்புக்கு : 87545 80270 / 87545 80274

 

காவிரி: உச்சநீதிமன்றத் தீர்ப்பினால்

  குறைக்கப்பட்டது நீர் ; மறுக்கப்பட்டது நீதி
இத்தீர்ப்பு காலாவதியாகும் 15 ஆண்டுக்குள்ளாவது மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா..??

 

-     நடுவர் மன்றம் பகிர்ந்தளித்ததில்  15 டிஎம்சியை குறைத்தது நியாயமில்லை

-     தீர்ப்பை இதுவரை மதிக்காத கர்நாடகாவின் மீது கண்டிப்பு காட்டவில்லை, இனிமேலும் தீர்ப்பை மதிக்காமல் நடந்தால் எப்படிக் கையாள்வது என்பதை விரிவாக சொல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

-     6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என்ற தீர்ப்பின் முக்கியப்பகுதியை மத்திய அரசு உடனே செயல்படுத்தவேண்டும்.

-     தீர்ப்பை முறையாக அமல்படுத்தாவிட்டால் தேச ஒற்றுமை, கூட்டாட்சித் தத்துவம் பாதிக்கப்படும் நிலை உருவாகலாம் என்பதை மத்திய அரசு உணரவேண்டும்.

-     நமது மாநிலத்திற்குள் சேகரிக்கப்படும்/ உற்பத்தியாகும் 227 டி.எம்.சியை முறையாக சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

 

The Supreme Court verdict on Kaveri dispute has shocked the entire Tamil community as it appears skewed and partial in every way. SC hasn't offered any comprehensive/innovative solution to the 200 year old issue. Tamilnadu stands victimised before the Government of India and Karnataka who are the regular offenders in Karnataka issue. There will be a severe damage to India's integrity if the government of India and Karnataka refuses to obey the order. SPI requests the government of India to set up the Cauvery management board within a week to implement the SC's discriminatory verdict.

 

1824 முதல் தீர்வு காண முடியாமல் நீரு பூத்த நெருப்பாக இருக்கும் இருக்கும் காவேரி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் இதுவரை வழங்கிய பல தீர்ப்புகளை மதிக்காமல் காலம் கடத்திய கர்நாடக மற்றும் இந்திய அரசை ஏதும் கண்டிக்காமல் மென்மையான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது. கர்நாடகாவில் தேர்தல் ஆண்டாக இருக்கும் நிலையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை மத்திய அரசு மதிக்குமா என்ற ஐயமும் எழுந்துள்ளது.

 

 

 

தண்ணீர் குறைப்பு:

 

1991 இடைக்கால தீர்ப்பு :205 டிஎம்சி 

2007 காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு :192 டிஎம்சி

2018 உச்சநீதிமன்ற தீர்ப்பு :177 டிஎம்சி

 

1924ஆம் ஒப்பந்த படி காவேரியில் வரும் தண்ணீரில், தமிழகம் 80 சதவிகிதமும் கர்நாடக 17% சதவிகிதம் பயன்படுத்த முடியும் என்று கூறி இருக்கிறது. ஆனால் நடுவர்மன்ற தீர்ப்பின்படி கர்நாடக்கிவிற்கு 37%, தமிழகத்திற்கு 57% சதவிகிதமும் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதை எவ்வித தர்க்கமுமின்றி உச்சநீதிமன்றம் 55% ஆகக் குறைத்து இருக்கிறது. 25 டிஎம்சி தண்ணீர் என்பது காவேரி பாயும் 11 தமிழக மாவட்டங்களின் ஒரு வருட குடிநீர் தேவை. தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் தரம் மற்றும் அளவு குறைந்து கொண்டே போகிறது என்று பல அரசின் ஆய்வுகள் தெரிவித்து இருக்கின்றன. ஆனால் எவ்வித புள்ளிவிவரங்களின் அடிப்படை இன்றி தமிழகத்தில் நிலத்தடி நீர் அதிகமாக இருப்பதை கணக்கில் கொண்டு, 10 டிஎம்சி மற்றும் பெங்களூரின் குடிநீர் தேவைக்காக 4.5 டிஎம்சி தருவதாக உத்தரவிட்டு (தீர்ப்பில் 404,15 பத்தியில்,462ஆம் பக்கம்)  இருப்பது தர்க்கம் இல்லாத தன்னிச்சையான முடிவு. ஒரு வேளை தமிழகத்தில் அமைதியாக போராட்டம் நடத்துவதால், கர்நாடகாவின் அராஜகத்துக்கு உச்சநீதிமன்றமும் அடிபணிந்துவிட்டதா என்ற ஐயம் ஏற்படுகிறது.

 

ஒதுக்கப்பட்ட தண்ணீரை கர்நாடக தர மறுக்கிறது என்பது கடந்த கால வரலாறு மற்றும் முக்கியமான பிரச்னை. ஒப்பந்தத்தை மீறினால் கர்நாடகாவிற்கு என்ன தண்டனை என்பதை தீர்ப்பு விரிவாக சொல்லவில்லை. புதுமையான தெளிவான தீர்ப்பை வழங்காமல், ஒப்பந்தத்தை மீறும் கர்நாடகாவிற்கு கூடுதல் தண்ணீர் ஒதுக்கி இருப்பது வரலாற்று பிழை.

 

காவேரி மேலாண்மை வாரியம்:

 

காவேரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில், "இரு மாநிலங்களும் முறையாக நதிநீரைப் பங்கிட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும். அவ்வாரியத்திற்கு உரிய அதிகாரங்கள் கொடுக்கப்படவேண்டும். இது செய்யப்படவில்லை என்றால், எங்கள் தீர்ப்பு "வெறும் காகிதத்தில்" மட்டுமே இருக்கும்" என்று கூறப்பட்டது( நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு பக்கம் 223:

14. For this purpose, we recommend that Cauvery Management Board on the lines of Bhakra Beas Management Board may be constituted by the Central Government. In our opinion, the necessity of setting up a suitable mechanism is of utmost importance; besides whatever machinery is set up should be adequately empowered to implement the Tribunal's decision, as otherwise, we are afraid our decision would only be on a piece of paper.)

 

தீர்ப்பு வெளியாகி 11 ஆண்டுகள் மற்றும் அரசிதழில் வெளியாகி 5 வருடங்கள் ஆன பிறகும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. 2016இல் வழக்கு நடந்த பொழுது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று வாதாடினார். மத்திய அரசுகள் மேலாண்மை வாரியத்தை அமைக்க விரும்பவில்லை என்ற எதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் உச்சநீதிமன்ற தீர்ப்பு இவ்விடத்தில் மென்மையாகவும் தமிழகத்திற்கு அநீதி இழைக்கும் விதமாக அமைந்து இருக்கிறது. மேலாண்மை வாரியத்தை அமைக்கவிட்டால் அல்லது தாமதப்படுத்தினால் அல்லது உரிய அதிகாரங்களோடு அமைக்கவில்லை என்றால் என்ன தண்டனை என்பதை உச்சநீதிமன்றம் விவரிக்கவில்லை. இந்திய அரசியல் சாசன சரத்து 262ஐ மேற்கோள்காட்டி ஆளும் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்காமல் போவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

 

மத்திய அரசுக்கு கடும் கண்டனம்:

 

மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்னையை தீர்ப்பதில் மத்திய அரசு மற்றும் பாராளுமன்றத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. அனால் தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லை என்பதால், தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. 1990ஆம் ஆண்டு அமைக்கப்பபட்ட நடுவர்மன்றம், 2007இல் இறுதி தீர்ப்பை வழங்குகிறது. அத்தீர்ப்பை 2013இல் அரசிதழில் வெளியிடப்படுகிறது. நதிநீர் பங்கீடு சட்டம் 1956 படி 6(1) படி, நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டுவிட்டால், அது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு சமமாக பாவிக்கப்படவேண்டும். ஆளும் மத்திய அரசோ, ஆர்டிகிள் 262ஐ கோடிட்டு காட்டி, காவேரி வழக்கில் அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்று கூறுகிறது. 17 வருடம் ஆராய்ந்து அளிக்கப்பட்ட தீர்ப்பையும் மதிக்காமல், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல், பாராளுமன்றத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று காலம் தாழ்த்தும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை எப்படி நம்ப முடியும்? உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையென்றால் 2007இல் வழக்கு தொடர்ந்த பொழுது கூறாமல் 2016இல் தங்களுக்கு பிடிக்காத உத்தரவு வந்த பிறகு கூறுவது அக்கிரமத்தின் உச்சக்கட்டம்.

 

 

எங்கே போகிறது 227 டிஎம்சி:

 

தமிழகத்திற்கு மொத்த தண்ணீர் அளவு:

1924 - 575.68 டிஎம்சி 

1972- 489 டிஎம்சி

2007 - 419 டிஎம்சி

2018 - 404 டிஎம்சி

 

ஒரு நூற்றாண்டில் தமிழகம் சட்டப்படி 175 டிஎம்சியை இழந்து இருக்கிறது. இது தவிர தமிழக்தில் உற்பத்தி ஆகும் 227 டிஎம்சியும் வெகுவாக குறைந்து இருக்கிறது. கர்நாடகா காவேரியில் தண்ணீர் திறந்து, மேட்டூரில் தண்ணீர் திறந்தால் மட்டுமே காவேரியில் தண்ணீர் வருகிறது. தமிழகத்திலே உற்பத்தியாகும் 227 டிஎம்சியி எங்கே போயிற்று? தமிழக அரசு உடனே விழித்து கொண்டு, தமிழகத்தில் உற்பத்தியாகும் நீரை முறையாக சேமித்து பயன்படுத்த வேண்டும்.

 

 

காங்கிரஸ் மற்றும் பாஜக - தேசிய ஒற்றுமை மற்றும் இறையாண்மை - குழிதோண்டி புதைப்பு

 

சட்ட தீர்வுகள், சமாதான பேச்சுவார்த்தைகள், நீதிமன்ற உத்தரவுகள் என்று எதன் மூலமும் தீர்வு கிடைக்காத நிலையில், ஒரு இக்கட்டான விளிம்பிற்கு தமிழ்நாட்டை தள்ளி இருக்கிறது. தேசிய கட்சிகளின் கீழ்த்தரமான ஓட்டு வங்கி அரசியலினால் இன்று தேச ஒற்றுமையே கேள்விக்குறி ஆகி உள்ளது. 2007 முதல் 2013 இழுத்தடித்து, உச்சநீதிமன்ற உத்தரவினால் அரை மனதுடன் காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் காங்கிரஸ் அரசு வெளியிட்டது. சுதந்திரம் பெற்று தந்து இந்தியாவை கட்டமைத்த கட்சியாக இருக்கும் காங்கிரஸ், ஒரு மாநிலத்தின் ஓட்டு வங்கிக்காக சட்டத்தையும் உச்சநீதிமன்றத்தையும் இழிவு படுத்தி அரசியல் சாசனத்தையே நீர்த்து போக செய்து விட்டது. காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், 2013 முதல் பாஜக அரசு தமிழகத்தை ஏமாற்றி வருகிறது. இந்திய தேசியத்தின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை காக்க பிறந்த தன்னார்வல கட்சியாக காட்டி கொள்ளும் பாஜக, ஏன் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் நியாயத்துக்கும் கட்டுப்படவில்லை? அனைத்து முயற்சிகளையும் எடுத்து, தன் உரிமைகளை பறிகொடுத்து, தீர்வுக்கான வழியே இல்லாத நிலையில் இருக்கும் தமிழகத்திற்கு மேலும் அநீதியை பாஜக அரசு இழைத்து வருகிறது. 

 

இனிமேலும் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை பெறுவதற்கு நீதிமன்றங்கள் மற்றும் மத்திய அரசுகள் முட்டுக்கட்டையாக இருக்குமேயானால் தேசிய இறையாண்மை மற்றும் ஒற்றுமை பாதிக்கப்படும். மக்களின் பிராந்திய உணர்வுகளை தூண்டிவிட்டு மாநில கட்சிகள் இந்திய ஒற்றுமையை சீர்குலைக்க வழிவகுக்கும். ஜாக்கிரதை!!

 

 

 

சிவ.இளங்கோ 

தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

Contact Number: 87545-80270

 

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


​Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

No comments:

Post a Comment