Friday 9 December 2016

போயஸ் தோட்டத்தை குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக்க வேண்டும்...பத்திரிகை செய்தி

போயஸ் தோட்டத்தை குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக்க வேண்டும்...

சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை
பத்திரிகை செய்தி ( 09.12.2016)

               மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சொத்துக்கள் யாருக்கு சொந்தமாகப் போகிறது என்பது குறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியாகி வருகின்றன. "மக்களால் நான் ; மக்களுக்காக நான்" என்று முழங்கிய ஜெயலலிதா அவர்களின் சொத்துக்கள் தமிழக மக்களின் பொதுப்பயன்பாட்டிற்கு வருவதுதான் பொருத்தமாக இருக்கும். 

குறிப்பாக அவர் வாழ்ந்த "போயஸ் கார்டன்" இல்லத்தை எம்.ஜி.ஆரின் வழியொற்றி பொதுப்பயன்பாடிற்கு கொண்டுவரவேண்டும். எம்.ஜி.ஆர்.அவர்கள் வாழ்ந்த ராமாவரம் தோட்டமானது "காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் தங்கி படிக்கும் பள்ளியாக" மாற்றப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். அவர்களின் விருப்பப்படி 1990முதல் இது இயங்கிவருகிறது.

2011ல் ஆட்சிப்பொறுப்பேற்ற ஜெயலலிதா அவர்கள், அந்த ஆண்டிலேயே அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்றிவிட்டு அவ்விடத்தை "குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக்க" நடவடிக்கைகள் எடுத்தார். (அரசியல் காரணங்களுக்காக அந்நூலகத்தை மாற்றமுயன்றார் என்பது வேறுவிஷயம்...நீதிமன்றமும் அதற்குத் தடை விதித்துவிட்டது) இதனையும் கருத்தில் கொண்டு பார்த்தால், போயஸ் கார்டன் தோட்டத்தை குழந்தைகள் நல மருத்துவமனை ஆக்குவதே சரியாக இருக்கும் என்பதே சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கருத்தாகும்.


நேரடி வாரிசு யாரும் இல்லாத மறைந்த முதல்வரின் இல்லத்தில் ஏற்படுத்தப்படும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையின் மூலம் தமிழக மக்கள் பலரின் வாரிசுகள் உயர்தர சிகிச்சை பெறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர அதிமுக நிர்வாகிகள், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது.



                                                             சிவ.இளங்கோ, |
                                                       
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
                                                                           
   
87545-80270,87545-80274                                                                              

No comments:

Post a Comment